வெள்ளி, 29 அக்டோபர், 2010

மரம்

உதிரும் இலைகூட
உங்கள்
உணர்வைத்தட்டவில்லையா?

காய்ந்த சருகும்
கானம் இசைப்பது
உங்கள்
காதில் விழவில்;லையா?

இங்கு
பாம்புக்கும் இடமுண்டு
பச்சிளங் குருவிக்கும் இடமுண்டு
உச்சி சுடும் வெயிலிலும்
உள்ளம் குளிரும் சுகமுண்டு

பச்சி பறவைகளின்
பாரத கண்டங்களாவோம்
இதை
மெச்சி மதிக்காத மனிதர்களுக்கு
விறகுத் துண்டுகளாவோம்

கல்லால் எறிந்தாலும்
கனியாய் விழுவோம்
மண்ணில் புதைத்தாலும்
மீண்டும்
மரமாய் முளைப்போம்

பல நூறு ஆண்டுகளாய்
பக்குவமாய் வளர்ந்த போதும்
சில நூறு நொடிகளில்
சிதைக்கிறதே உங்கள் கரம்

மரம் தந்த மகத்துவத்தை
மறந்துவிட்ட மனிதர்களே!
மரண தண்டனை தந்தவர்களே!
உங்களை
மன்னிப்பது எங்கள் குணம்
ஆனால்
மன்னிக்காது உங்கள் இனம்


இதயமற்ற மனிதர்களே!
உங்களின்
ஆடாத ஆட்டத்தால்
அழிவது
நாங்கள் மட்டுமல்ல
ஆண்டவனும் தந்திடாத
உங்களின் ஆயுளும் தான்

தரையில் ஊற்றிய தண்ணீரையும்
தலையில் தருகின்றோம்
மழையின்றி மாண்டு வரும் மனிதர்களே!
மழை தரும் எங்களையும்
மாண்டுவிடச் செய்வது ஏனோ?

வரலாறு படிக்கட்டும்
இனிவரும் வரலாறு படிக்கட்டும்

“ மரம் என்ற ஒன்றுண்டு
மழை தரும் மகத்துவம் அதற்குண்டு
ஆறடியிலும் அது உண்டு
அறுபதடியிலும் வளர்வதுண்டு
கானம் இசைக்கும் இலையுண்டு
காயும் கனியும் தருவதுண்டு
தென்றல் தரும் சுகமுண்டு
அதில் தெய்வங்கூட உறைவதுண்டு
மரம் எனும் தெய்வத்தை
வேரோடு அழித்திட்ட
இரக்கமற்ற மனிதரும் அங்குண்டு”

என்று
வரலாறு படிக்கட்டும்
இனிவரும் வரலாறு படிக்கட்டும்

மழை



கருவாச்சி பெற்றெடுத்த
காவியங்கள்

சிறு தூரல்களும்
சின்னச் சினுங்கள்களும்
எந்தன் பிறப்பின் அடையாளங்கள்

வான்புகழும் வள்ளுவன்
எங்களை வணங்கினான்
எங்கள் முதல் வணக்கம்
அவனுக்கு

மேட்டுக்குடியும்
பள்ளப் பகுதியும்
பார்ப்பதில்லை
சாக்கடையானாலும்
சந்தனமானாலும்
சலனப்படுவதில்லை
எல்லோர் பொருட்டும் பெய்கின்றோம்
எதற்காக
நல்லோர் பொருட்டு என்றீர்கள்?

கருப்பாக இருந்தாலும்
சிவப்பாக இருந்தாலும்
கட்டித்தழுவிக் காதலிப்போம்
உள்ளொன்று வைத்துப்
புறமொன்று காட்டும்
பழக்கம் எங்களிடம் இல்லை
கருப்பில் கலந்தால் கருப்பாவோம்
சிவப்பெனில் சிவந்து நிற்போம்
விட்டுக்கொடுத்து பெற்றுக் கொள்வதில்
எங்களைவிட நீங்களா
உயர்ந்தவர்கள்?

வராவிட்டால் துடிக்கின்றீர்கள்
வந்துவிட்டாலோ குடைபிடிக்கின்றீர்கள்?
ஏங்கிய உங்களுக்காக
இறங்கி வந்த எங்களைக்
கதவடைத்து வரவேற்பதுதான்
உங்கள் பண்பாடா?

புல்லும் பூவும்
மண்ணும் மரமும்
காயும் கனியும்
எங்கள் தாலாட்டில்
தலைகவிழ்ந்து நிற்பதைப்
பார்த்ததில்லையா?

எங்கள் வரவுக்காக
வாசல் வந்த தவளைகள்
எங்கள் உறவுக்காக
ஏங்கியிருந்த குவளைகள்
இவைகளை விட்டுவிட்டு
சின்னத் தூரலுக்கே
ஜன்னல் அடைக்கும்
ஜனங்களே
உங்களையா விரும்புவோம்?

கூரை வீட்டில் ஒழிந்துகொண்ட
எங்கள் கூட்டாளியைக்
கூரை பிரித்துக் கண்பது
எங்கள் கண்ணாமூச்சி விளையாட்டு

சிறிதாகத்தான் தொடங்குவோம்
சீரினால்
இந்த உலகையே
எங்களுக்குள் விழுங்குவோம்

பள்ளம் நோக்கிப் பாய்வதே
எங்கள் கொள்கை
கட்டுக்காகவும் கட்சிக்காகவும்
மாறும் இழிவு
எங்களிடம் இல்லை

எங்களுக்குள் அடித்துக் கொண்டாலும்
பட்டுத்தெறித்துக் கொண்டாலும்
பாசத்துடன் கூடியே இருப்போம்
நீர் அடித்து நீர் விலகுவதில்லை
எனும் வாக்கை
நீர் அறிந்ததில்லையா?

பெய்யும் பொழுதில் மழை
அடித்துச் செல்லுகையில் ஆறு
விழுந்தால் அருவி
ஓரிடத்தில் குவிந்தால் குளம்
இவை எல்லாம் கலந்தால்
கடல்
இது எங்கள் ஒற்றுமைக்கான
அடையாளங்கள்

எங்கள் கூட்டணிக்குக்
கிடைத்த வெற்றி
எழுபத்தோர் சதவீதம்
விட்டுவைத்துள்ள விழுக்காட்டை
விழுங்குவதற்கு
வினாடிகள் போதும்
வீணாக விளையாடதீர்கள்

கடவுளைக் கற்பித்த கயவர்களே
உங்களால்தான்
எங்கள்
காவிரியும் கங்கையும்
கலங்கப்பட்டது
கலங்கப்படுத்திய உங்களுக்கு
புனிதமா
என்ன நியாயம் இது?

மாதம்
மும்மாரிதான் பொழிந்தோம்
நீங்களோ
எங்கள் மீது
வசைமாறிப் பொழிந்தீர்கள்
நச்சுப்புகையை
எங்கள்
தொப்புள் கொடிச் செந்தங்களை
தூரோடு சாய்த்துத்
தரையோடு போடடீர்கள்
இன்று
மாறிமாறி முயன்றாலும்
மாரியாகப் பொழிய முடியாது
மாற்றிவிட்டீர்கள்

விண்ணையும் மண்ணையும்
ஊசி கொண்டு தைக்கும்
வித்தை தெரியுமா உங்களுக்கு?
காற்றோடு கலந்து பேசும்
கலைகள் தெரியுமா உங்களுக்கு?

உள்ளங்கையும் நனையாத
குளியல் எதற்கு
உள்ளமும் குளிரும்படி
எங்களுடன் உறவாடுங்கள்
வந்து நனைந்து பாருங்கள்
அழுக்கு மட்டுமல்ல
அங்கே குடிகொண்ட
அகந்தையும் அகன்றோடும்